2 September 2018

IPPB ஐ நாம் ஏன் புறக்கணிக்கிறோம்?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
IPPB ஐ நாம் ஏன் புறக்கணிக்கிறோம் ?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.

நமது தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் தவிர, இதர சாதாரண உறுப்பினர்கள், மாற்றுச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் நேற்றைய தேதியில் (01.09.2018) பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு மற்றும் அஞ்சல் துறையால் நடத்தப்பட்ட IPPB துவக்க விழாவில் ஏதோ அவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிபோல மிக்க மகிழ்ச்சியுடன் புத்தாடை அணிந்து பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தது உங்களுக்குத் தெரியும்.

பல WHATSAPP குழுக்களிலும், முகநூல் பதிவுகளிலும் இந்த நிகழ்வின் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

இது ஏதோ தமிழகத்தில் மட்டும் என்று எண்ண வேண்டாம். அதிகம் விழிப்புணர்வு உள்ள தொழிற்சங்கங்கள் உள்ள தமிழகப் பகுதியிலேயே இப்படி என்றால், இதர மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் கேட்கவே வேண்டாம். அவ்வளவு கொண்டாட்டம். நமது NFPE சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கூட பல வட மாநிலங்களில் இந்த விழாவில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு நிகழ்வை பதிவிட்டது மட்டுமல்ல, IPPB விழிப்புணர்வு பேரணிகள் என்று வாத்திய முழக்கங்களோடு நடனமிட்டு கொண்டாடிய நிகழ்வை முகநூல் பதிவுகளில் பரவலாக காண முடிகிறது.

அரசாங்கத்தின் வலிமையான பிரச்சாரத்தினால் பொது மக்கள் வேண்டுமானால் இந்த புதிய திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு வரவேற்கலாம். ஆனால் இந்த புதிய வங்கிப் பகுதி வேலைகளை செய்திட வேண்டிய அஞ்சல் துறை ஊழியர்கள் இப்படி மகிழ்ச்சியாக இந்த வங்கியின் வருகையை வரவேற்பது சற்று ஜீரணிக்க முடியாத ஒரு நிலையாகவே நமது தொழிற் சங்கத்திற்கு உள்ளது.

அப்படி ஏன் நமது தொழிற் சங்கத்திற்கு இதன் மீது வெறுப்பு ? ஒரு வேளை நமக்கு சரியான புரிதல் இல்லையா என்று கூட பல தோழர்கள் வினவ ; அட ... இவர்களுக்கு இதே வேலையப்பா ... விடு .. விடு .. நமது அதிகாரிகள் எவ்வளவு அன்பாக நம் அனைவரையும் அழைத்துச் சென்று வேலைகூட செய்ய வேண்டாம் என்று கூறி இந்த விழாவில் நம்மை கௌரவப் படுத்தியுள்ளார்கள். இதை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் ? என்று பல ஊழியர்கள் வெளிப்படையாகவே பேசிச் செல்வதும் நமக்கு தெரிகிறது.

அப்படி ஊழியர்கள் ஆதரவைப் பெற்ற இப்படிப்பட்ட நல்ல ஒரு திட்டத்தை நாம் எதிர்க்க காரணங்கள் உண்டா ? நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் . உங்கள் நண்பர்களுக்கும் , மாற்றுச் சங்கத் தோழர்களுக்கும் இதனை பதிவிட்டு அளியுங்கள். சரியா அல்லது தவறா என்று அவர்களே தீர்மானிக்கட்டும்.

IPPB துவங்கப்பட்டதன் வரலாறு
-------------------------------------------------------

1. 2006 ஆம் ஆண்டு இந்திய அரசின்
11 வது அய்ந்தாண்டு திட்டத்தில்,
அஞ்சல் துறை 1000 கோடி நட்டத்தில் இயங்குவதால் இந்த நட்டத்தை ஈடு கட்ட அஞ்சல் துறைக்கென்று ஒரு வங்கிச் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

2. 2009 இல் இந்திய அஞ்சல் துறைக்கென்று அஞ்சல் வங்கி தனியாக உருவாக்கிட அரசின் அறிவிப்பு செய்யப்பட்டது.

3. 2012 இல் NATIONAL POSTAL POLICY அறிவிக்கப்பட்டு அஞ்சல் துறையில் அஞ்சல் வங்கி தனியாக துவக்கி அதற்கென தனியே ஒரு MANAGEMENT BOARD ஏற்படுத்தப் படவேண்டுமென்றும், அதில் அஞ்சல் துறையின் செயலர் ஒரு உறுப்பினராக மட்டுமே இருக்க வேண்டுமென்றும் இது PPP முறையில் செயல்படுத்தப்பட்டு இந்த MANAGEMENT BOARD இல் தனியார் நிறுவன முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என்றும் அறிவிக்கை வெளியிப்பட்டது.

4. பிப்ரவரி 2013 இல் இதற்கென திட்ட முன்வடிவுகளை தரும் பொருட்டு இந்திய அஞ்சல் துறை Ernst and Young என்ற நிறுவனத்தை இந்திய அஞ்சல் துறை பணித்தது. இதன் மீது அளிக்கப்பட பரிந்துரையில் மத்திய நிதி அமைச்சகம், இந்திய அஞ்சல் துறைக்கு தனியே வங்கி ஏற்படுத்தி நிர்வகிக்க முன் அனுபவமோ அல்லது நிபுணத்துவமோ கிடையாது என்று கூறி இந்த முன்மொழிவை நிராகரித்தது.

5. ஆகஸ்ட் 2013 இல் திட்டக் குழுவும் இதே காரணங்களை கூறி இந்திய அஞ்சல் சேவை பகுதி வங்கியாக மாற்றிட முடியாது என்றும் மேலும் தனியே வங்கிப் பணிகளை நிர்வகிக்க இந்திய அஞ்சல் துறைக்கு போதிய முன் அனுபவமோ அல்லது நிபுணத்துவமோ கிடையாது என்று கூறி இதனை நிராகரிக்க, இதன் மீது அக்டோபர் 2013 இல் காபினெட் தனது முடிவை அறிவித்து இந்த முன்மொழிவை நிராகரித்தது.

6. இதுவரை, இந்திய அஞ்சலின் ஒரு பகுதியான மத்திய நிதி அமைச்சகத்தின் கீழான அஞ்சல் சேமிப்பு வங்கி என்பது இந்திய அஞ்சல் வங்கியாக மாற்றப்பட்டு செயல்படும் என்றும் முற்றிலும் அஞ்சல் துறையின் கீழ் இந்த வங்கிப் பகுதி இயங்கும் என்றும் அஞ்சல் ஊழியர்களில் ஒரு பகுதியினரே இதனை நிர்வகிப்பார்கள் என்றும் தொழிற் சங்கங்கள் நம்பி வந்தன. அதன்மீது கருத்துக்களை கூறி வந்தன.

7. ஆனால் தமிழக அஞ்சல்மூன்று சங்கம் மட்டும் NATIONAL POSTAL POLICY 2012 இன் அடிப்படையில் இது ஆபத்தான எதிர்கால விளைவுகளை ஏற்படுத் தக்கூடும் என்றும் இதன் மீது சரியான புரிதல் வேண்டும் என்றும் 2013 லேயே தனது கருத்துக்களை தனது வலைத் தளத்தில் பதிவிட்டது என்பது உண்மை. இப்போதும் சென்று பார்த்தலும் தெரிந்து கொள்ளலாம்.

8. இதன் பிறகு இந்திய அஞ்சல் துறையில் நட்டத்தில் இயங்கி வரும் அஞ்சல் கட்டமைப்பை புதுப்பித்து விரிவுபடுத்திட ஆலோசனை வழங்கிடுமாறு TASK FORCE என்ற கமிட்டி ஒய்வு பெற்ற முன்னாள் காபினெட் செயலர் திரு. T.S.R. சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 2014இல் அமைக்கப்பட்டு, அந்தக் கமிட்டி டிசம்பர் 2014 இல் இந்தத் துறை ஆறு கூறுகளாக பிரிக்கப்பட்டு தபால் கையாளுதல் தவிர மீதமுள்ள ஐந்து பகுதிகளும் CORPORATE கம்பெனிகளாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. அதில் முக்கியமானவை BANKING, INSURANCE AND ECOMMERCE என்பவையாகும். இதனை நமது தொழிற் சங்கங்கள் எதிர்த்தன. ஆனால் அஞ்சல் துறை CORPORATE மயமாக்கப்படாது என்று நமது துறையின் செயலர் அப்போது உறுதி அளித்தவுடன் இதனை நாம் மறந்துவிட்டோம்.

9. ஆனால் நவம்பர் 2014 லேயே இந்திய ரிசர்வ் வங்கியிடம் நமது அஞ்சல் துறை PAYMENT வங்கியை ஏற்படுத்து வதற்கான விண்ணப்பத்தினை அளித்தது. இது அரசின் முன்கூட்டிய முடிவு ஆகும். ஆகஸ்ட் 2015 இல் வெளியிடப்பட்ட பட்டியலில் AIRTEL, RELIANCE, PAYTM, IPPB உள்ளிட்ட 11 நிறுவனங்கள் இந்த PAYMENT வங்கிக்காக அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தன. அவை கொள்கை அளவில் ஏற்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

10. இதனை நம்முடைய அஞ்சல் துறை ஊழியர்கள், குறிப்பாக இளம் தோழர்கள் வரவேற்றனர். ஆனால் தமிழக அஞ்சல் மூன்று சங்கம் மட்டும் இது ஆபத்தானது. இந்த PAYMENT வங்கி என்பது அரசுத் துறையாக இருக்காது. கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்திட ஒப்புதல் அளித்தால் மட்டுமே இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க இயலும்; எனவே இதன் ஊழியர்கள் அரசு ஊழியர் என்ற அந்தஸ்தை இழப்பார்கள் என்பதை வலைத்தள மற்றும் முகநூல் பதிவுகளில் எடுத்துக்காட்டி நமது தொழிற் சங்கங்கள் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

11. கடைசியாக INDIA POST PAYMENT BANK LTD (INCORPORATED) என்ற பெயரில் IPPBயானது கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு கடந்த 17, ஆகஸ்ட் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கியினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த கம்பெனியை நிறுவதற்கான ஏற்பாடுகளும், ஊழியர் நியமன நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டன.நேற்று இந்த கார்ப்பரேட் வங்கி முறையாகத் துவக்கப்பட்டது.


IPPB ஐ நாம் ஏன் எதிர்க்க வேண்டும் ?
---------------------------------------------------------------

1. இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி என்பதன் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட முழுப்பெயர் INDIA POST PAYMENT BANK LTD. (INCORPORATED) என்பதாகும். இதன் பெயரே இதன் உண்மைத் தன்மையை சாதாரண பாமரனுக்கும் தெரிவிக்கும். லிமிடெட் என்பதும் INCORPORATED என்பதும் ஒரு அரசுத் துறையை குறிப்பதாகாது.

2. இது இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் விதி எண் 22ன் கீழ் Banking Regulation Act 1949 அடிப்படையில், கம்பெனி சட்டம் 2013 இன் கீழ் PUBLIC LIMITED COMPANY யாக பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் ரிசர்வ் வங்கி அனுமதிக்கும். எனவே இது இந்திய அஞ்சல் துறை என்ற அரசுத் துறையின் கீழ் வராது. ஒரு கம்பெனியாக மட்டுமே இயங்கும்.

3. ரிசர்வ் வங்கி விதிகளின் படி இது அஞ்சல் வாரியத்தின் கீழ் இயங்காது. இதற்கென்று தனியே ஒரு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 இயக்குனர்கள் உள்ளனர். இந்த ஒன்பதில் ஒருவரே நமது துறையின் செயலர். இந்த கம்பெனியின் தனி வாரியத்திற்கு CEO & MD என்பவர் திரு . சுரேஷ் சேத்தி ஆவார். இவர் VODAFONE நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். இதுபோல இந்த கம்பெனியின் பங்குகள் விற்பனைக்குப் பிறகு, தனியார் அல்லது அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் இந்த மேலாண்மைக் குழுவில் இடம் பெறுவர்.

4. ரிசர்வ் வங்கியின் PAYMENT வங்கி விதி VII ன் படி 49% வரை அந்நிய அல்லது தனியார் முதலீடு இந்த கம்பெனியில் அனுமதிக்க வேண்டும். துவக்கும்போது 100% அரசின் முதலீடு. ஆனாலும் கம்பெனி வளர்ந்த பிறகு முதலீட்டுக்கான பங்குகள் கோரப்படும். அப்போது அந்நிய அல்லது தனியார் நிறுவனங்களுக்கு 49% வரை பங்குகளை விற்கவேண்டும் என்பது விதி ஆகும். பங்குகள் விற்றபிறகு இந்த CORPORATE COMPANY கிட்டத்தட்ட ஒரு தனியார் நிறுவனம் போல ஆகிவிடும்.

5. இதன் பணியாளர்கள் வங்கி சட்ட விதிகளின் படி தனியாக நியமிக்கப் படுவார்கள். தற்போது BRANCH LEVEL வரையில் ஏற்கனவே மேலதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களின் ஊதியம் என்பது வங்கி சட்ட விதிகளின்படி தானே தவிர, ஊதியக் குழு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் ஊதிய விகிதங்கள் கிடையாது. ஆரம்ப நிலையில் ஆட்கள் பற்றாக்குறைக்கு அஞ்சல் பகுதியிலிருந்து DEPUTATION அடிப்படையில் நம்முடைய ஊழியர்கள் அங்கு பணியமர்த்தபட்டுள்ளார்கள். தற்போதுள்ள கடுமையான ஆட்பற்றாக்குறை சூழலில் இங்கிருந்து ஊழியர்களை அங்கே அனுப்புவது என்பது நமது ஊழியர்களை மேலும் பணிச் சுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

6. இந்த சூழலில் THIRD PARTY PRODUCT என்ற வகையில் 230 விதமான தனியார் அல்லது இதர நிறுவனங்களின் வேலைகள் AGENCY அடிப்படையில் நம் ஊழியர்களே இதற்காக செய்து தரவேண்டும். ஏற்கனவே உள்ள பணிச்சுமை மற்றும் ஆட்பற்றாக்குறை நிலையில் இது நம்மால் சாத்தியமா ? ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்ல வேண்டும் அல்லது தற்கொலை சாவுகள்தான் அதிகமாகும்.

7. BRANCH LEVELஇல் அந்த வங்கிக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அதன் பணிகள் நம்முடைய எழுத்தர், தபால்காரர், GDS மூலமே நாடு முழுமைக்கும் நிறைவேற்றப்படும். இதற்காக INCENTIVE என்று குறைந்த தொகையை கொடுத்து முழு வேலையும் வாங்கப்படும்.

8. நமது அஞ்சல் சேமிப்பு வங்கியின் 17 கோடி CUSTOMER களும் கிட்டத்தட்ட 34 ஆயிரம் கோடி கணக்குகளும் INTEROPERABLE ஆக இந்த கம்பெனியாக செயல்படும் வங்கிக்கு தாரை வார்க்கப்படும். அஞ்சல் துறையின் 40% வருமானத்தை தரும் அஞ்சல் சேமிப்பு வங்கி படிப்படியாக கால ஓட்டத்தில் அந்த வங்கிக்கு மாற்றப்படும்.

9. தற்போதுள்ள IPPB விதிகளின்படி SB கணக்குகள் தவிரவும் RD கணக்குகள், SSA மற்றும் PPF கணக்குகளின் TRANSACTION கள்கூட IPPB கணக்குகள் மூலம் PAY IN SLIP இல்லாமல் நேரிடையாக BIO METRIC முறையில் IPPB இன் கருவிகளிலேயே செலுத்திடலாம். இது நேரிடையாக CENTRAL SERVER மூலம் உரிய கணக்குகளில் சேர்ந்துவிடும். எனில் நமது அஞ்சல் வங்கி TRANSACTION என்பது என்ன ஆகும்?. வேலைப்பளு இல்லை என்று காரணம் கூறி ஊழியர்கள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும்.

10. அடுத்து இன்சூரன்ஸ் பகுதியும் தனியே கம்பெனி ஆக்கப்படும் என்று நமது துறையின் அமைச்சர் கடந்த 7.7.2018 அன்று வெளிப்படையாக பத்திரிக்கைகளுக்கு செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் வருமானம் அதிகம் வரக்கூடிய PREMIUM PRODUCTS என்று சொல்லக்கூடிய ECOMMERCE பகுதி, COD மற்றும் EXPRESS PARCEL, SPEED POST போன்றவற்றை பிரித்தெடுத்து தனியே CORPORATE COMPANY ஆக அறிவிக்க முன்னோட்டமாக PARCEL DIRECTORATE தற்போது தனியே உருவாக்கப் பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

11. TSR சுப்ரமணியன் கமிட்டி பரிந்துரைப்படி இப்படி வங்கிப் பகுதி, இன்சூரன்ஸ் பகுதி , ECOMMERCE பகுதி என்பவை CORPORATE கம்பெனி ஆக்கப்பட்டால் அஞ்சல்துறை என்ற அரசுத் துறை POST CARD, ILC, NEWS PAPER இவைகளை வைத்து நடத்தப்படுமா ? இவை ஏற்கனவே நட்டத்தில் உள்ள பகுதிகள். அப்படியானால் நாம் அரசுத்துறையாக இருப்போமா ? அல்லது CORPORATE கம்பெனியாக இருப்போமா ?

இந்த மாற்றங்கள் ஒரு நாளில் நிச்சயம் நடக்காது என்பது தெரியும். ஆனால் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளில் இந்த மாற்றங்கள் ஏற்படும் போது , இப்போது இருக்கும் அரசு ஊழியர்கள் படிப்படியாக ஒய்வு அல்லது விருப்ப ஒய்வு பெற்றிட, புதிய கம்பெனிகளின் ஊழியர்கள் பெரும்பகுதியாகவும் தற்போதுள்ள இளைஞர்கள் சிறு பகுதியாக உள்ள அரசு ஊழியர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு கம்பெனிகளிடம் எங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்று கேட்க முடியுமா ? இதற்கு சட்டத்தில் இடம் உண்டா ?

இது போல இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. அவை அனைத்தையும் அளித்திட இந்த சுற்றறிக்கை போதாது. சிறிய எழுத்தில் இந்த நான்கு பக்கங்களை படிக்கவே பல தோழர்களுக்கு அலுப்பாக இருக்கும். ஆனால் இது நம் வாழ்க்கை பிரச்சினை அல்லவா ?

இந்த வங்கி நம் அஞ்சல் துறையின் வங்கியாக ஆரம்பத்தில் பேசப்பட்டது போல இருந்திருப்பின் நாம் எதிர்க்க வேண்டிய சூழல் இருக்குமா ? அதில் தேவையான முன்னேற்றங்களை கோரிப் பெற்றிக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா ?

தற்போது நமக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத கம்பெனி ஆக, ஆனால் நம்முடைய அஞ்சல் சேமிப்பு வங்கியை கபளீகரம் செய்யும் அமைப்பாக, அதிகப்படி ஆட்கள் எதுவும் இல்லாமல், இருக்கும் அரசுத் துறை ஊழியர்களை வைத்தே அதன் பணியை செய்யும் அடிமை ஏஜெண்டுகளாக ஆக்கிட வந்திருக்கும் IPPB ஐ நாம் எப்படி ஏற்பது ? இதனை நம் ஊழியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்கலாமா ?
இதனை நீங்கள் ஏற்கிறீர்களா ?

ஆயின் இவற்றை அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் ஏன் முன் கூட்டியே எதிர்க்க வில்லை ? தற்போது விழாவை வெறும் புறக்கணிப்பு செய்தால் போதுமா ? என்று நிறைய தோழர்கள் கேட்கிறார்கள்.

இந்த பிரச்சினைகளை நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் ஆரம்பம் தொட்டே தெளிவாக சுட்டிக் காட்டி வந்திருக்கிறது. முன் பத்திகளில் அளித்த செய்தி போல ஏற்கனவே எச்சரிக்கைகளை நாம் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறோம்.

இந்த IPPB க்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் கொடுக்கப்பட்ட பிறகும் கூட, கடந்த 2018 பிப்ரவரி 26 மற்றும் 27 தேதிகளில் பாட்னாவில் நடைபெற்ற அஞ்சல் மூன்று மத்திய செயற்குழு கூட்டத்தில் AGENDA
5 இல் IPPB ஆய்படு பொருளாக வைக்கப்பட்டு , இதன் மீதும் CSI, GDS உள்ளிட்ட பிரச்சினைகளின் மீதும் நம் சம்மேளனமோ அல்லது குறைந்த பட்சம் நமது அஞ்சல் மூன்று சங்கமோ தொடர் போராட்டங்களை நடத்தி அதன் முடிவாக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்திட வேண்டும் என்று கோரினோம்.

மத்திய சங்கத் தலைவராக உள்ள உங்கள் மாநிலச் செயலர் இந்த முன்மொழிவை தனது தலைமை உரையிலேயே சமர்ப்பித்தார். நமது தமிழகத்தை சேர்ந்த CHQ நிர்வாகிகள் அனைவரும் ஒரே குரலில் இதனை கருத்து மாற்றமின்றி முன் மொழிந்தோம்.

கேரளா , தெலிங்கானா, மேற்கு வங்க தோழர்களும் நமது கருத்தை ஆதரித்தனர். ஆனால் பெரும்பான்மை வட மாநிலங்களின் செயலர்கள் இதற்கு போதிய ஆதரவு தரவில்லை. என்றாலும் நாம் வேலை நிறுத்தம் வேண்டும் என்று அழுத்தமாகவே இறுதிவரை கோரி வந்தோம்.

இதன் பிறகே கடந்த 7.3.2018 அன்று இலாக்கா அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து IPPB
குறித்து கலந்துரையாடியது . இந்த நிலையிலாவது அகில இந்திய அளவில் அனைத்து தொழிற் சங்கங்களும் இதனை எதிர்த்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். என்ன காரணம் கருதியோ இது நடைபெறவில்லை.

வேறு வழியில்லாத நிலையில்தான் உங்கள் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் இதன் மீது குறைந்த பட்சம் ஒரு எதிர்ப்பினையாவது பதிவு செய்யும் பொருட்டு இந்த விழாவில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்தது. இது போலவே அதே நேரத்தில் நமது சம்மேளனமும் அகில இந்திய சங்கங்களும் இதே நிலையை அறிவித்தன .

காலம் கடந்து விட்டது என்று கவலைப்படாமல் இனியாவது இதன் மீது மாற்றங்கள் நாம் கோரிட வேண்டும். இதன் பணிகள் தனியே செய்திடப் படவேண்டும் என்றும் அஞ்சல் சேமிப்பு வங்கி சீரழிக்கப் படக்கூடாது என்றும், IPPB இன் ஊழியர்களே அதன் பணியை செய்திட பணிக்கப்பட வேண்டும் என்றும், இனி இன்சூரன்ஸ் மற்றும் ECOMMERCE பகுதிகள் CORPORATE மயமாக்கப்படகூடாது என்றும் கோரிக்கைகளை மாற்றி வைக்கலாம்.

அதன் மீது நம் துறையில் தொடர் போராட்டங்கள், தேவையானால் வேலை நிறுத்தங்கள் நடத்திடலாம். இந்த திசையிலாவது இனி சிந்தனையை நாடு முழுமைக்கும் ஒருங்கிணைப்போம்.

அதற்கும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கமே முன்கை எடுக்கும் என்ற உறுதியை கூறி கனத்த இதயத்துடன் முடிக்கிறோம்.

தோழமையுடன்
J. இராமமூர்த்தி,
மாநிலச் செயலர்,
NFPE அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம். (1.9.2018)

1 comment:

  1. ஒவ்வொரு முறை விழித்துக்கொள்ள வாய்ப்புகள் இருந்தும் காலம்தான் சென்று கொண்டிருக்கிறது, போராட்டம் செய்ய வேண்டிய அவசியத்தில் நாம் தற்போது இருக்க, இன்னும் தாமதம் வேண்டாம்...

    ReplyDelete

DG Post உடன் ஊழியர் தரப்பு பிரச்னைகள் குறித்த சந்திப்பு !

ஏற்கனவே நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயற் குழுவில் எடுத்த முடிவின்படி, புது டெல்லி மாபெரும் தொழிலாளர் பேரணிக்குப் பின்னர் 6.9.18 அன்று...